சனி, 21 மார்ச், 2015

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்? 
 
 
 
விநாயகர் இப்படி எலியின் மீது சவாரி செய்வதற்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையும் உள்ளது. அனைத்து தடங்கல்களையும் நீக்கி, பாரபட்சம் இன்றி அனைவரையும் ஆசீர்வதிப்பவர் தான் விநாயகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மற்ற கடவுள்களை வணங்குவதற்கு முன்பாக விநாயகரை ஏன் வணங்க வேண்டும் என்பதற்கு அவர் எலியின் மீது பயணிக்கும் கதையே விளக்கமளிக்கும். விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்? விநாயகர் பயணிக்கும் எலி, கடந்த ஜென்மத்தில் முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு உபதேவதையாக விளங்கியது என்ற விஷயம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். விநாயகர் ஏன் எலியின் மீது பயணிக்கிறார் என்ற கதையை முழுமையாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். க்ரோன்ச்சாவின் கதை விநாயக புராணத்தின் படி, விநாயகரின் எலி கடந்த ஜென்மத்தில் உபதேவதையாக இருந்துள்ளது. அதனை க்ரோன்ச்சா என அழைத்தனர். இந்திரனின் அரச சபையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் கொண்ட முனிவரின் கால்களை க்ரோன்ச்சா மிதித்து விட்டது. வேண்டும் என்றே தன் காலை மிதித்து விட்டது என எண்ணி, வெகுண்டு எழுந்த வாமதேவ முனிவர், அதனை ஒரு எலியாக மாற சாபம் அளித்தார். இதனை கேட்டு அதிர்ந்த க்ரோன்ச்சா, அவர் காலில் மண்டியிட்டு கருணை காட்ட மன்றாடியது. இது வாமதேவ முனிவரின் கோபத்தை குறைத்தது. தன் சாபத்தை திருப்பி பெற இயலாது என கூறினார். ஆனால் விநாயகரின் வாகனமாக விளங்கும் எனவும் கூறினார். அதனால் அனைவராலும், ஏன் பிற கடவுள்களாலும் கூட வணங்கப்படும் ஒன்றாக மாறியது. இதன் விளைவாக, வாமதேவ முனிவரின் சாபத்தினால் க்ரோன்ச்சா எலியாக உருமாறி, மகரிஷி பரஷர் ஆசிரமத்தில் விழுந்தது. க்ரோன்ச்சாவின் பயங்கரவாதம் இருப்பினும் க்ரோன்ச்சா சாதாரண எலியல்ல. சொல்லப்போனால், மலையளவில் பெரியதாக விளங்கியது. அதே போல் அதனை பார்த்த அனைவரையும் அஞ்ச வைத்தது. பல வகையான தொந்தரவுகளை அளித்து, கண்ணில் பட்ட அனைத்தையும் அழித்து வந்தது. உலகத்தில் வாழ்ந்த மக்களுக்கு பயங்கரத்தின் மற்றொரு அர்த்தமாக விளங்கியது. விநாயகரின் வாகனம் இந்நேரத்தில் தான் பரஷர் ரிஷியின் ஆசிரமத்திற்கு விநாயகர் அழைக்கப்பட்டார். அவரை பரஷர் ரிஷியும் அவரின் மனைவியுமான வத்சலாவும் கவனித்துக் கொண்டனர். ராட்சச எலியை பற்றியும், அது உருவாக்கியுள்ள பயத்தை பற்றியும் கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவெடுத்தார். தன் ஆயுதங்களின் ஒன்றான பாஷாவை (சுருக்கு) எடுத்த விநாயகர், க்ரோன்ச்சா இருக்கும் திசையில் அதனை பறக்க விட்டார். அந்த பாஷா மிகவும் பிரகாசமாக இருந்ததால் அதன் வெளிச்சம் இந்த அண்டம் முழுவதும் படர்ந்தது. எலியை துரத்திய பாஷா அதன் கழுத்தை சுற்றிக் கொண்டது. அதை அப்படியே விநாயகரின் காலடியில் கொண்டு சேர்த்தது. இதனால் விநாயகரிடம் மன்னிப்பு கோரிய க்ரோன்ச்சா அவரின் வாகனமாக மாறியது.

Read more at: http://tamil.boldsky.com/inspiration/short-story/why-lord-ganesha-rides-mouse-006475.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக